புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது ;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி ,சொல்லடி ,சக்தி மாகாளீ
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது ;செல்வம் பெருகுது
படிப்பு வளருது ,பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் ,
போவான் ,போவான் ஐயோவென்று போவான் !
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது ;தொழிலாளி வாழ்வான் ;
சாத்திரம் வளருது ;சூத்திரம் தெரியுது ;
யந்திரம் பெருகுது ;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது ,வளருது ;
சொல்லடி ,சொல்லடி,மலையாள பகவதீ
அந்தரி ;வீரி ,சண்டிகை ,சூலி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது ;
தொப்பை சுருங்குது ;சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது ;
பயந் தொலையுது ,பாவ ந் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது ;
நேத்திரம் திறக்குது ,நியாயம் தெரியுது ;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது ;
வீரம் வருகுது ;மேன்மை கிடைக்குது ;
சொல்லடீ சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது ;தர்மம் பெருகுது

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு ;தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் .

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி சிவசக்தி !- நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையறு பந்தினைப்போல் -உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்

நசையறு மனங்கேட்டேன் -நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

தசையினைத் தீசுடினும் -சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்

அசைவறு மதிகேட்டேன் -இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு -அல்லா லென்றன்

மூச்சை நிறுத்திவிடு

தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்

சிந்தனை மாய்த்து விடு ;

யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்

ஊனைச் சிதைத்துவிடு ;

ஏகத் திருந்துலகம் இங்குள்ளன

யாவையும் செய்பவளே !

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்

பாரத்தைப் போக்கிவிடு ;

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்

செத்த உடலாக்கு .

இந்தப் பதர்களையே நெல்லா மென

எண்ணி இருப்பேனோ ?

எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று

இயங்கி யிருப்பவளே .

உள்ளம் குளிராதோ ? பொய்யாணவ

ஊனம் ஒழியாதோ ?

கள்ளம் உருகாதோ -அம்மா ! பக்திக்

கண்ணீர் பெருகாதோ ?

வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு

வேட்கை தவிராதோ ?

விள்ளற் கரியவளே அனைத்திலும்

மேவி யிருப்பவளே !

கண்ணம்மா என் காதலி - 1

காட்சி -வியப்பு

செஞ்சுருட்டி -ஏகதாளம்

ரசங்கள் - சிருங்காரம் ,அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ ?

வட்டக் கரியவிழி கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கருநீலப் புடவை

பதித்த நல் வயிரம்

நட்டு நாடு நிசியில் தெரியும்

நக்ஷத்திரங்க ளடீ !

சோலை மல ரொளியோ - உனது

சுந்தரப் புன்னகையோ தான் ?

நீலக் கடலலையே உனது

நெஞ்சி லலைக ளடீ !

கோலக் குயிலோசை உனது

குரலினிமை யடீ !

வாலைக் குமரி யடீ - கண்ணம்மா !

மருவக் காதல் கொண்டேன்

சத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா !

சாத்திர மேதுக் கடீ

ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா

சாத்திர முண்டோ டீ !

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடி ! இது பார்

கன்னத்து முத்த மொன்று !

பெண் விடுதலை

விடுதலைக்கு மகளிரெல் லோரும்

வேட்கை கொண்டனம் ;வெல்லுவம் என்றே

திடம னத்தின் மதுக்கிண்ண மீது

சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்

உடையவள் சக்தி ஆண்பெண் ணிரண்டும்

ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்

இடையிலேப்பட்ட கீழ்நிலை கண்டீர்

இதற்கு நாமொருப் பட்டிருப் போமா ?

திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்

தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ;

குறைவி லாது முழு நிகர் நம்மைக்

கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்

சிறுமை தீர நந் தாய்த்திரு நாட்டைத்

திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்

அறிவிழந்தது பண்டை வழக்கம்

ஆணுக் குப்பெண் விலங்கெனும் அக்தே

விடியும் நல்லொளி காணுதி நின்றே ,

மேவு நாக ரிகம்புதி தொன்றே,

கொடியர் நம்மை அடிமைகள் என்றே ,

கொண்டு தாம் முதல் என்றன ரன்றே ,

அடியோ டந்த வழக்கத்தைக் கொன்றே ,

அறிவு யாவும் பயிற்சியில் வென்றே

கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்

காரிகைக் கணத்தீர் துணிவுற்றே .

கண்ணம்மா எனது -குல தெய்வம்

ராகம் -புன்னாகவராளி

பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் -கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

(நின்னை )
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன ,கொன்றவை போக்கென்று

(நின்னை )

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்

(நின்னை )

துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட

(நின்னை )

நல்லது தீயது நாமறியோம் அன்னை !
நல்லது ! நாட்டுக தீயதை ஓட்டுக !

(நின்னை )