முரசு !!!

வலிமை உடையது தெய்வம் - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம் ;
மெலிவு கண்டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ ?


அன்பென்று கொட்டு முரசே ! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு ;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம் பெற்று வாழ்வார்

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

பாருக்குள்ளே சமத் தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரர் தன்மை
யாருக்கும் தீமை செய் யாது -புவி
யெங்கும் விடுதலை செய்யும்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம் ;
பயிற்றுப் பல கல்வி தந்து -இந்தப்
பாறை உயர்த்திட வேண்டும்

ஒன்றென்று கொட்டு முரசே - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே !
நன்றென்று கொட்டு முரசே - இந்தப்
நானில மாந்தருக்கெல்லாம் !!

வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே ( வந்தே)

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ ?
சீனத்த ராய்விடு வாரோ ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ ? ( வந்தே )

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ (வந்தே )

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் -இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெதுவேண்டும் ( வந்தே )

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவருக்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் ( வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கிளிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர -இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி ( வந்தே )