மோகத்தைக் கொன்றுவிடு -அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்து விடு ;
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு ;
ஏகத் திருந்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே !
பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு ;
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு .
இந்தப் பதர்களையே நெல்லா மென
எண்ணி இருப்பேனோ ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே .
உள்ளம் குளிராதோ ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ ?
கள்ளம் உருகாதோ -அம்மா ! பக்திக்
கண்ணீர் பெருகாதோ ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே !
0 comments:
Post a Comment