மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு -அல்லா லென்றன்

மூச்சை நிறுத்திவிடு

தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்

சிந்தனை மாய்த்து விடு ;

யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்

ஊனைச் சிதைத்துவிடு ;

ஏகத் திருந்துலகம் இங்குள்ளன

யாவையும் செய்பவளே !

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்

பாரத்தைப் போக்கிவிடு ;

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்

செத்த உடலாக்கு .

இந்தப் பதர்களையே நெல்லா மென

எண்ணி இருப்பேனோ ?

எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று

இயங்கி யிருப்பவளே .

உள்ளம் குளிராதோ ? பொய்யாணவ

ஊனம் ஒழியாதோ ?

கள்ளம் உருகாதோ -அம்மா ! பக்திக்

கண்ணீர் பெருகாதோ ?

வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு

வேட்கை தவிராதோ ?

விள்ளற் கரியவளே அனைத்திலும்

மேவி யிருப்பவளே !

0 comments: