முரசு !!!

வலிமை உடையது தெய்வம் - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம் ;
மெலிவு கண்டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ ?


அன்பென்று கொட்டு முரசே ! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு ;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம் பெற்று வாழ்வார்

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

பாருக்குள்ளே சமத் தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரர் தன்மை
யாருக்கும் தீமை செய் யாது -புவி
யெங்கும் விடுதலை செய்யும்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம் ;
பயிற்றுப் பல கல்வி தந்து -இந்தப்
பாறை உயர்த்திட வேண்டும்

ஒன்றென்று கொட்டு முரசே - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே !
நன்றென்று கொட்டு முரசே - இந்தப்
நானில மாந்தருக்கெல்லாம் !!

வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே ( வந்தே)

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ ?
சீனத்த ராய்விடு வாரோ ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ ? ( வந்தே )

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ (வந்தே )

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் -இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெதுவேண்டும் ( வந்தே )

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவருக்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் ( வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கிளிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர -இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி ( வந்தே )

புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது ;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி ,சொல்லடி ,சக்தி மாகாளீ
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது ;செல்வம் பெருகுது
படிப்பு வளருது ,பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் ,
போவான் ,போவான் ஐயோவென்று போவான் !
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது ;தொழிலாளி வாழ்வான் ;
சாத்திரம் வளருது ;சூத்திரம் தெரியுது ;
யந்திரம் பெருகுது ;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது ,வளருது ;
சொல்லடி ,சொல்லடி,மலையாள பகவதீ
அந்தரி ;வீரி ,சண்டிகை ,சூலி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது ;
தொப்பை சுருங்குது ;சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது ;
பயந் தொலையுது ,பாவ ந் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது ;
நேத்திரம் திறக்குது ,நியாயம் தெரியுது ;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது ;
வீரம் வருகுது ;மேன்மை கிடைக்குது ;
சொல்லடீ சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது ;தர்மம் பெருகுது

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு ;தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் .

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி சிவசக்தி !- நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையறு பந்தினைப்போல் -உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்

நசையறு மனங்கேட்டேன் -நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

தசையினைத் தீசுடினும் -சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்

அசைவறு மதிகேட்டேன் -இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு -அல்லா லென்றன்

மூச்சை நிறுத்திவிடு

தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்

சிந்தனை மாய்த்து விடு ;

யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்

ஊனைச் சிதைத்துவிடு ;

ஏகத் திருந்துலகம் இங்குள்ளன

யாவையும் செய்பவளே !

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்

பாரத்தைப் போக்கிவிடு ;

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்

செத்த உடலாக்கு .

இந்தப் பதர்களையே நெல்லா மென

எண்ணி இருப்பேனோ ?

எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று

இயங்கி யிருப்பவளே .

உள்ளம் குளிராதோ ? பொய்யாணவ

ஊனம் ஒழியாதோ ?

கள்ளம் உருகாதோ -அம்மா ! பக்திக்

கண்ணீர் பெருகாதோ ?

வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு

வேட்கை தவிராதோ ?

விள்ளற் கரியவளே அனைத்திலும்

மேவி யிருப்பவளே !

கண்ணம்மா என் காதலி - 1

காட்சி -வியப்பு

செஞ்சுருட்டி -ஏகதாளம்

ரசங்கள் - சிருங்காரம் ,அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ ?

வட்டக் கரியவிழி கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கருநீலப் புடவை

பதித்த நல் வயிரம்

நட்டு நாடு நிசியில் தெரியும்

நக்ஷத்திரங்க ளடீ !

சோலை மல ரொளியோ - உனது

சுந்தரப் புன்னகையோ தான் ?

நீலக் கடலலையே உனது

நெஞ்சி லலைக ளடீ !

கோலக் குயிலோசை உனது

குரலினிமை யடீ !

வாலைக் குமரி யடீ - கண்ணம்மா !

மருவக் காதல் கொண்டேன்

சத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா !

சாத்திர மேதுக் கடீ

ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா

சாத்திர முண்டோ டீ !

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடி ! இது பார்

கன்னத்து முத்த மொன்று !