குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது ;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி ,சொல்லடி ,சக்தி மாகாளீ
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது ;செல்வம் பெருகுது
படிப்பு வளருது ,பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் ,
போவான் ,போவான் ஐயோவென்று போவான் !
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது ;தொழிலாளி வாழ்வான் ;
சாத்திரம் வளருது ;சூத்திரம் தெரியுது ;
யந்திரம் பெருகுது ;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது ,வளருது ;
சொல்லடி ,சொல்லடி,மலையாள பகவதீ
அந்தரி ;வீரி ,சண்டிகை ,சூலி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது ;
தொப்பை சுருங்குது ;சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது ;
பயந் தொலையுது ,பாவ ந் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது ;
நேத்திரம் திறக்குது ,நியாயம் தெரியுது ;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது ;
வீரம் வருகுது ;மேன்மை கிடைக்குது ;
சொல்லடீ சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது ;தர்மம் பெருகுது
புதிய கோணங்கி
Posted by Karthik 12:05 PM 0 comments
Labels: கவிதைகள், பல்வகை பாடல்கள்
அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு ;தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
Posted by Karthik 11:04 AM 0 comments
Labels: கவிதைகள், தனிபாடல்கள்
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் .
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி !- நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?
விசையறு பந்தினைப்போல் -உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் -நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் -சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் -இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?
Posted by Karthik 9:09 AM 0 comments
Labels: சுயசிந்தனை, தோத்திரப் பாடல்கள்
மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு -அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்து விடு ;
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு ;
ஏகத் திருந்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே !
பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு ;
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு .
இந்தப் பதர்களையே நெல்லா மென
எண்ணி இருப்பேனோ ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே .
உள்ளம் குளிராதோ ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ ?
கள்ளம் உருகாதோ -அம்மா ! பக்திக்
கண்ணீர் பெருகாதோ ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே !
Posted by Karthik 11:00 PM 0 comments
Labels: கவிதைகள், தோத்திரப் பாடல்கள், நவரசம், மகாசக்தி
கண்ணம்மா என் காதலி - 1
காட்சி -வியப்பு
செஞ்சுருட்டி -ஏகதாளம்
ரசங்கள் - சிருங்காரம் ,அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்டு நாடு நிசியில் தெரியும்
நக்ஷத்திரங்க ளடீ !
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகையோ தான் ?
நீலக் கடலலையே உனது
நெஞ்சி லலைக ளடீ !
கோலக் குயிலோசை உனது
குரலினிமை யடீ !
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா !
மருவக் காதல் கொண்டேன்
சத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா !
சாத்திர மேதுக் கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோ டீ !
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி ! இது பார்
கன்னத்து முத்த மொன்று !
Posted by Karthik 8:36 AM 1 comments
Labels: கண்ணம்மா, கண்ணன் பாட்டு, கவிதைகள், காதல்
பெண் விடுதலை
விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம் ;வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்
உடையவள் சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்
இடையிலேப்பட்ட கீழ்நிலை கண்டீர்
இதற்கு நாமொருப் பட்டிருப் போமா ?
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ;
குறைவி லாது முழு நிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீர நந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்
அறிவிழந்தது பண்டை வழக்கம்
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அக்தே
விடியும் நல்லொளி காணுதி நின்றே ,
மேவு நாக ரிகம்புதி தொன்றே,
கொடியர் நம்மை அடிமைகள் என்றே ,
கொண்டு தாம் முதல் என்றன ரன்றே ,
அடியோ டந்த வழக்கத்தைக் கொன்றே ,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே .
Posted by Karthik 11:06 AM 0 comments
Labels: பல்வகை பாடல்கள், பெண்
கண்ணம்மா எனது -குல தெய்வம்
ராகம் -புன்னாகவராளி
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் -கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை )
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன ,கொன்றவை போக்கென்று
(நின்னை )
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்
(நின்னை )
துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
(நின்னை )
நல்லது தீயது நாமறியோம் அன்னை !
நல்லது ! நாட்டுக தீயதை ஓட்டுக !
(நின்னை )
Posted by Karthik 10:42 AM 0 comments
Labels: கண்ணன் பாட்டு, கவிதைகள்
அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு ; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
Posted by Karthik 11:49 AM 0 comments
Labels: கவிதைகள், சுயசிந்தனை, தனிப்பாடல்கள்
பாரதியின் கடிதங்கள்
(கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)
ஒம் ஸ்ரீகாசி ஹனுமந்த கட்டம்
எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷ முறுவேன்
உனதன்பன் சி.சுப்ரமணியபாரதி****
கடயம். 30 ஜனவரி. 1919
இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையததாகயிருக்கிறது.
இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக்கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்ரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னம்மாச் சித்தி மூலமாக வேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்
உனக்கு மகாசக்தி அமரத்தன்மை தருக
உனதன்புள்ள
( இந்த கடிதம் பெற்ற வெங்கடேசுவர எட்டுத்தேவர் பாரதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சமவயது நண்பர். கடையம் வந்ததும் தனது மைத்துனர் அப்பாதுரையின் வீட்டில் தங்கியிருந்த பாரதி கடையம் ராமசாமி கோவிலுக்கு வடக்கே பட்டர்வீடு என்ற ஒட்டுக்கட்டடத்துக்கு குடியேறுகிறார். இதை பற்றிய விபரங்கள் தான் கடிதத்தில் உள்ளது. ஜமீன்தார் பொருளதவி செய்து உதவினாரா என்ற தகவல்கள் தெரியவில்லை.)
_____________________________________________________________________
ஒம் புதுச்சேரி
எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக
நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை
ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,
அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்
தம்பி - நான் ஏது செய்வேனடா
தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது
தம்பி - உள்ளமே உலகம்
ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!
நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி
உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ ! பற. ! பற ! - மேலே மேலே! மேலே! **
தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது
தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது
அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது
தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது
ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது
பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது
தொழில்கள், தொழில்கள் என்று கூவு
தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக
முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு
சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு
தம்பி - நீ வாழ்க
**உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி - உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.
Posted by Karthik 11:30 AM 1 comments
Labels: எஸ் ராமகிருஷ்ணன் பதிவு, கடிதங்கள், செல்லம்மா
தமிழ்
யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல்இனிதாவ தெங்குங்
காணோம்பாமரராய், விலங்குகளாய்,
உலகனைத்தும்இகழ்ச்சிசொலப் பான்மை
கெட்டுநாமமது தமிழரெனக்
கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை
உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப்
போல்பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் , ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்
Posted by Karthik 11:19 AM 1 comments
Labels: தமிழ், தேசிய கீதங்கள்
விடுதலை!
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே.
Posted by Karthik 11:17 AM 0 comments
Labels: சுதந்திர பாடல்கள், விடுதலை